இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் 4 மணிக்கு மேடைக்கு வருவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4 மணிக்கு திடீரென நாகையில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காடம்பாடி மைதானத்தில் ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மாலை 5.30 மணி வரையும் நடிகர் விஜயால் மேடைக்கு வர முடியவில்லை. 5.35 மணியளவில் மழைலேசாக தூறியதை தொடர்ந்து 5.45 மணிக்கு நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
அப்போது மேடை முன் திரண்டிருந்த ரசிகர்கள் மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வந்ததால் கூட்டத்தில் கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் அப்போது பேசியதாவது-
ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பியை இழந்தால் எவ்வாறு துன்பப்படுவோமோஅதுபோல இன்று நாம் ஒன்று அல்ல, 2 அண்ணன்களை இழந்து துயரப்பட்டு உள்ளோம் என பேசிக்கொண்டு இருந்த போது மழை தூறியதாலும், ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஆர்ப்பரித்து வந்ததாலும் விஜயால் பேச முடியவில்லை.
இதைத்தொடர்ந்து விஜய் பேச்சை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு திரும்பினார். பின்னர் சுமார் அரைமணி நேரம் கழித்து மீண்டும் விஜய் மேடைக்கு வந்தார்.
மீண்டும் மேடையில் தன் பேச்சை தொடர்ந்தார்-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும்.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில் தூக்கி வீசி உள்ளனர்.
இலங்கை ராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட.
மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல்போய் விடும். ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல்- அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும்.
இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன். இவ்வாறு ஆவேசமாக பேசினார் விஜய்.
No comments:
Post a Comment