இந்தியாவின் முக்கியமான ஃபைட் மாஸ்டர் இந்தியாவின் முக்கியமான நடிகரை அழைத்தால் வராமல் இருப்பாரா? வந்தார் சல்மான்கான்! அழைத்தவர் பெப்ஸி விஜயன்.
தனது மகன் சபரீசனை ஹீரோவாக்கி மார்கண்டேயன் என்ற திரைப்படத்தை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார் பெப்ஸி விஜயன். இந்த படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவுக்குதான் வந்திருந்தார் சல்மான். மாலை ஏழு மணிக்கு பிவிஆர் திரையரங்கத்தில் விழா. ஆனால் சல்மான் மேடைக்கு வர இரவு ஒன்பதாகிவிட்டது. அதுவரை தியேட்டரின் கீழேயுள்ள அலுவலகத்தில் காத்திருந்தார் நடிகர் விஜய். இருவரும் ஒரே நேரத்தில் மேடைக்கு வருவதாகதான் ஏற்பாடு. ஆனால் பாட்டியாலாவிலிருந்து சென்னைக்கு வருகிற நேரம் குறைவு. ஏர்போர்ட்டிலிருந்து பிவிஆருக்கு வருகிற நேரம் அதிகம் என்பதை வந்த பின்புதான் உணர்ந்திருப்பார் சல்மான். ஏனென்றால், சென்னை டிராபிக்தான் விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிற அளவுக்கு தாறுமாறக போய் கொண்டிருக்கிறதே...
பெப்ஸி விஜயனின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர்கள் கூடி வந்து வாழ்த்து சொல்கிற நேரம் அது என்பதால் தியேட்டர் கொள்ளாமல் திரண்டிருந்தார்கள் விவிஐபிகள். சல்மான், விஜய் தவிர்த்து இயக்குனர் சீமான், ஜெயம் ரவி, நடிகை ஸ்ரேயா, மிஷ்கின், ஆர்.வி.உதயகுமார், ஆந்திராவிலிருந்து ஸ்ரீஹரி மற்றும் பெப்ஸியின் முன்னாள் இன்நாள் பொறுப்பாளர்கள் கூடியிருக்க, தவியாய் தவித்துக் கொண்டிருந்தார் பெப்ஸி விஜயன்.
படப்பிடிப்பில் விரலசைத்தால் அலறி ஒதுங்குகிற தொழிலாளர்கள் போல இருக்க மாட்டார்களே பத்திரிகையாளர்களும், புகைப்பட மற்றும் சேனல் ஒளிப்பதிவாளர்களும்? சிறப்பு விருந்தினரான சல்மான்கானை நடக்க கூட வழியில்லாமல் முட்டிக் கொண்டு நின்றார்கள். பவுன்சர்கள் உங்க கேமிராவை பிடுங்கி எறிஞ்சுருவாங்க. தயவு பண்ணி ஒதுங்கி நில்லுங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் விஜயன்.
எப்படியோ சித்தர்காடு சந்தைக்குள் நுழைந்த திமில் காளைபோல கம்பீரமாக நின்றார், நடந்தார், முறைத்தார், திகைத்தார், சிரித்தார்... சல்மான்! இவருக்கும் ஸ்ரேயாவுக்கும் அருகருகே சீட். மேடையில் மைக் பிடித்த ஒவ்வொருவர் பற்றியும் விசாரித்துக் கொண்டேயிருந்தார் ஸ்ரேயாவிடம். அதிலும் அவர்கள் பேசுவது என்ன என்பதை சல்மானுக்கு லைவ்வாக விவரித்துக் கொண்டிருந்தார் ஸ்ரேயா.
படத்தின் ஹீரோ சபரீசனை லிட்டில் மாஸ்டர் என்று ஆசையோடு வர்ணித்த சல்மான், அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
நான் பாட்டியாலாவிலிருந்து வந்திருக்கேன். மும்பையிலிருந்து ஸ்ரேயா வந்திருக்கிறார். விஜய் சென்னையிலிருந்து வந்திருக்கிறார் என்று சல்மான் பேச ஆரம்பிக்க, யாரோ ஒருவர் குறுக்கிட்டு சீனாவிலிருந்து வந்திருக்கார் என்று திருத்தினார். அதிர்ச்சியான சல்மான் என்னது? சீனாவிலிருந்தா...என்றார் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல். அவ்வளவு பேரும் விஜயன் மாஸ்டர் மீது வச்சிருக்கும் அன்பினால்தான் வந்திருக்கிறோம். அவர் வெறும் பைட் மாஸ்டர் மட்டுமல்ல, சிறந்த டெக்னிஷியன் கூட. அப்பாவிடமிருந்த ஜீன் அப்படியே வந்திருக்கு சபரீசனிடம். பாடல் காட்சியில் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவர் விரும்பினால் பாலிவுட்டுக்கு நடிக்க வரலாம். வெல்கம் என்று வாழ்த்திய சல்மானை ஆச்சர்யத்தோடு ரசித்தது அத்தனை கூட்டமும்.
No comments:
Post a Comment