தலைவா என அடுத்த படத்துக்கு தலைப்பு வைத்தது அரசியல் காரணத்துக்காகவா என விளக்கம் அளித்துள்ளார் விஜய். அவர் கூறுகையில், “தலைவா என்ற தலைப்பு அரசியலாகத் தெரிந்தாலும், படத்தில் அரசியல் தொடர்பான எந்தக் காட்சிகளும் இடம்பெறவில்லை. இந்தக் கதையை துப்பாக்கி படப்பிடிப்பின்போது எனக்கு இயக்குநர் விஜய் சொன்னார். கேட்டபோதே பிடித்துவிட்டது. இதுதான் எனது அடுத்த படம் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் தலைவா அரசியல் படம் அல்ல. அரசியல் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் படம் பார்க்கும்போதுதான் தலைவா என்ற தலைப்பு வைத்ததன் நோக்கம் தெரியவரும். இதற்கு முந்தைய படமான துப்பாக்கி ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதற்காக படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டர்களுக்கு அதிக இளைஞர்கள் வருகை, பெரிய வியாபாரம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்ற பல காரணங்களால் இது சாத்தியமாகி உள்ளது என நினைக்கிறேன். பாசில், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். இப்போது புதியவர் நேசன் இயக்கும் ஜில்லா படமும் அந்த வரிசையில் சேரும் என நம்புகிறேன்,” என்றார்.


No comments:
Post a Comment